
சங்க காலத்தில் கொடையில் சிறந்தவர்களில் வேட்டுவ அரசர்களான பேகன், பாரி, காரி, ஆய்அண்டிரன், அதியமான், நள்ளி மற்றும் ஓரி ஆகிய கடையேழு வள்ளல்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் வேட்டுவ அரசன் ஓரி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னனின் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் என குறிப்பிடப்படும் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றிலும், பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படையிலும் ஏராளமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வேட்டுவ அரசன் ஓரி சிறப்பை போற்றும் வகையில் கடந்த 1975 ஆம் ஆண்டு கொல்லிமலை செம்மேட்டில் வேட்டுவ மன்னனின் ஓரி குதிரை மீது அமர்ந்திருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி 18-ம் தேதி வேட்டுவ அரசன் ஓரிக்கு இரு தினங்கள் அரசு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் வில்வித்தையில் சிறந்து விளங்கிய வேட்டுவ மன்னனின் ஓரின் சிறப்பை போற்றும் வகையில் வில்வித்தை போட்டி நடத்தப்படுகிறது. இதுபோல், பாரம்பரிய நடனங்களும் நடத்தப்படுகின்றன.